மனித மூளை ஒரு மாபெரும் அதிசயம்.புத்திசாலித்தனம்,அறிவு என்பது மூளையில் உள்ள நியுரான்கள் எங்ஙனம் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன என்பதைபொறுத்தே அமைந்து இருக்கிறது .60000மில்லியனுக்கும் அதிகமான நியுரான்கள் மனித மூளையில் அமையப்பட்டுள்ளது என்பது விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு.தாயின் வயிற்றில் கரு தோன்றிய சில வாரங்களிலேயே கருவின் மூளையில் நியுரான்களின் உற்பத்தி ஆரம்பமாகி விடுகிறது.அதனால்தான் என்னவோ இன்றய மருத்துவ உலகம் குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுதே ஆக்கப்பூர்வமான சில,பல செயல்களை கருவுற்ற தாய்மார்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது.குழந்தை பிறந்து உலகின் முதல் சுவாசத்தை ஆரம்பித்த உடனேயே நமது கடமைகளும் ஆரம்பமாகி விடுகிறது.
குழந்தை பிறந்ததும்:
கருப்பையின் இளம் சூட்டில் இருந்து வெளிபட்டு உடனேயே தாயின் வயிற்றில் சிசுவை கிடத்துகின்றனர்.கருவறையின் கதகதப்பு சில சதவிகிதங்களாவது சிசு பெறும் அல்லவா?தான் இருக்கும் கிளைமேட்டின் நிலைக்கேற்ப சிசு தன்னை தயார்படுத்திக்கொள்கிறது.வாயை அசைத்து பாலை குடிக்க கற்றுக்கொள்கிறது.இந்த நேரத்தில் தாயின் அரவணைப்பும்,கதகதப்பும் அவசியம் தேவை.குழந்தை முகத்தைப்பார்த்து ஏதாவது பேசிக்கொண்டே இருப்பது தாயின் கட்டாய வேலகளில் ஒன்று என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.நேரம் கிடைக்கும் பொழுது குழந்தையுடன் பேசலாம் என்றிராமல் இதற்கெனவே நேரத்தை ஒதுக்கிகொள்ளுங்கள்.
1மாதம்:
இப்பொழுது வண்ணங்களை ஆராயும் .கண்களை சுழற்றிப்பார்க்கும் தன்மை ஏற்படுகிறது.இப்பருவத்தில்தான் முளையின் வளர்ச்சி முறையாக ஆரம்பமாகி விடுகிறது.வண்ணமயமான ஆடைகள்,பொருட்கள்,விளையாட்டு சாமான்கள்,திரை சீலைகள் என்று குழந்தையின் சுற்றுபுற சூழ்நிலையை வண்ண மயமாக அமைத்துக்கொள்ளுங்கள்.மென்மையான ஒலி எழுப்பகூடிய கிளுகிளுப்பைகளை உபயோகியுங்கள்.
3மாதம்:
இந்த நேரத்தில் குப்புறப்படுப்பது,திட உணவு கொடுத்தல்,உட்காருதல் போன்றவை செயல் படுத்தும் காலம்.அறையில் சீரியல் பல்புகளை தொங்க விட்டு சற்று தூரத்தில் நின்று அதனை பார்க்க செய்யுங்கள்.இதனால குழந்தையின் அறிவுத்திறன் பெருகும்.
6 மாதம்:
விளையாடுதல்,நடத்தல்,புரிந்துகொள்ளுதல் போன்ற செயல்கள் இருக்கும்.இச்சமயத்தில் மென்மையான விளையாட்டுப்பொருட்களை கஞ்சத்தனம் பண்ணாமல் வாங்கிகொடுங்கள்.உடைக்க விடுங்கள்.கயிற்றினால இழுக்கக்கூடியவண்டிகள் ,பொம்மைகள் போன்றவை நலம் பயக்கும்.
1வருடம்:
பொருட்களை தூக்கி வீசவும்,கீழ்படியவும்,பேச ஆரம்பிக்கவும் கூடிய பருவம்.மழலைகள் நாம் சொலவதை விட செய்வதைத்தான் அதிகம் ஏற்றுக்கொள்ளும்.ஆகவே நல்ல விஷயங்கள்,பண்பாடுகள்,செயல்களை குழந்தையின் எதிரே செய்வதற்கு பழகுங்கள்.வெறுப்பையும்,எரிச்சலையும்,கோபத்தையும்,சண்டை சச்சரவுகளையும் குழந்தை முன் காட்டாதீர்கள்.நல்ல பழக்க வழக்கங்களைப்பார்க்கும் மழலை தன் ஆழ்மனதில் பதித்துக்கொள்ளும்.பிற்காலத்தில்; நல்ல பிரஜையாக உருவெடுக்கும்.
2 வருடம்:
இந்நேரத்தில் குழந்தை ஆராயும் மன நிலைக்கு வந்திருக்கும்.மூளையின் சக்தி மேம்படும் பருவம் இது.நிறைய வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும்.எதிரே வரும் ஒவ்வொரு சம்பவத்தினையும் விளக்கிக்காட்டவேண்டும்.மழலையில் கேட்கும் வினாக்களுக்கெல்லாம் சலிக்காமல் கருத்தான பதில் கூறி தெளிவை ஏற்படுத்த வேண்டும்.டிவியில் மியூஸிக் சானலை ஆன் செய்து "மை நேம் இஸ் சுப்பு லக்ஷமி" போன்ற பாடலை அலற விட்டு அது ஆடுவதை ரசிக்காமல் அறிவுப்பூர்வமாக நேஷனல் ஜியாகிரபிக்,டிஷ் கவரி சேனல் போன்றவற்றை காட்டி விலங்குகள்,பறவைகள் போன்றவற்றை போட்டுக்காட்டி விளக்கம் சொலலாம்.பகுப்பாயும் திறனை வளர்க்கவேண்டும்.குழந்தையையும் பெரிய மனிதராக பாவித்து முக்கியத்துவம் கொடுங்கள்.
3 வருடம்:
நன்றாக பேச கற்றுக்கொள்கிறார்கள் .மொழிவளர்ச்சி அதிகரிக்கூடிய வயது.குழந்தை மீது தாய் அதிகம் கவனிக்க கூடிய பருவம் இது.குழந்தையின் ஆட்டம்,சேட்டைகளால் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடாமல் கண்களில் விளக்கெண்ணை விட்டு பார்த்துக்கொள்ள வேண்டிய சிக்கலான பருவம்.ஞாபகசக்தியை மேம்படுத்த நர்சரி ரைம்ஸ்,எழுத்துக்கள்,எண்கள் போன்றவற்றை பயிற்றுவிக்கவேண்டும்.அலுக்காமல் நல்ல கதைகள் கூறி கேள்வி கேட்டு பதில் கூறி தெளிவு படுத்த வேண்டும்.அவர்களையும் வினா எழுப்ப பழக்க வேண்டும்.வீர தீர கதைகள் கேட்கும் குழந்தைகள் தானும் சாதிக்க வேண்டும் என்ற ஆசைப்படுவார்கள்.வெற்றி பெற்ற மனிதர்களின் சரித்திரம் கேட்கும் மழலைகள் தானும் அவ்வாறே வரவேண்டும் என்ற எண்ணத்துடன் வளர்வார்கள்
4 வருடம்:
குழந்தையின் செயல்களை உன்னிப்பாக கவனியுங்கள்.நட்பு ஆரம்பமாகும் பருவம் இது.சேட்டைகள் தாங்காமல் அடிப்பதை குறைத்துக்கொள்ளுங்கள்.அடி வாங்கும் குழந்தை ஆராயும் அறிவு குறைந்து விடும்.சுறுசுறுப்பும் குறைந்து விடலாம்.நயமான வார்த்தைகள் பேசி பழகுங்கள்.
5 வருடம்:
நல்ல பள்ளியாக ஒரு வழியாக சேத்து இருப்பீர்கள்.குழந்தைக்கு கல்வி மீது ஈர்ப்பும்,ஆர்வமும் ஏற்படுத்த வேண்டியது பெற்றோருக்கு மட்டுமல்ல ஆசிரியருக்கும் உள்ள கடமை.ஆகவே குழந்தை வகுப்பாசிரியர்களுடன் தொடர்பு வைத்துகொள்ளுங்கள்.அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக பேசுங்கள்.குழந்தையின் ஆர்வம்தான் அது அதி புத்திசாலியாக நிர்மாணிக்கும்.ஆகவே குழந்தையின் ஆர்வத்தை மேம்படுத்துங்கள்.
6 வருடத்திற்கு மேல்:
கூச்ச சுபாவம்,குறைந்த கற்கும் திறன்,சோம்பல் போன்ற குறைபாடுகள் இருக்கும் குழந்தைகள் இனம் கண்டு திருத்தபடவேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர் கடமை.பிறரிடம் எப்படி பழகுதல்,உறவினர்கள்,பெரியவர்களுக்கு எப்படி மரியாதை கொடுத்தல்,எப்படி நடந்து கொள்ளுதல் போன்றவை அழகுற அறிந்து கொண்டு இருக்கக்கூடிய பருவம் இது.பிள்ளைகளின் அபார உடல்,மூளை வளர்சியை பெற்றோர் அறிய முடியும்.அறிவையும்,ஆற்றலையும்,உடல் பலத்தையும் எப்படி மேம்பட வைக்கவேண்டும் என்று நல்ல ,சத்துமிகு உணவுபழக்கவழக்கங்களாலும்,அரவணைப்பான பேச்சுகளாலும்,வாஞ்சையான அறிவுரைகளாலும்,தோழமை உணர்வு மிக்க நெருக்கத்தாலும் பிள்ளைகளை பண்பட வைக்கவேண்டிய கால கட்டமிது.
8 வயதுக்கு மேல்:
விளையாடும் ஆர்வம் அதிகமிருக்கும் பருவம் இது.படிப்பு மட்டுமல்லாமல் மற்ற நல்ல விஷயங்களிலும் ஈடுபட வையுங்கள்.பெற்றோர்கள் நல்லதொரு வழிகாட்டியாக ரோல்மாடலாக இருங்கள்.பெரியவ்ர்கள்,உறவினர்களிடம் எப்படி மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள்.கூட்டுக்குடும்பம் காணாமல் போய்க்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் வீட்டிற்கு வரும் உறவினர்களிடம் அமர்ந்து அளவளாவும் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுங்கள்.வெறுமனே ஹாய்..ஊய்..என்றிராமல் பொறுப்புடன் நடந்துகொள்ளும் பண்பை வளருங்கள்.
10 வயதுக்கு மேல்:
குழந்தை படிக்கும் முறை,அறை,நேரம்,நட்பு,அவர்களின் பொழுது போக்கு,செயல் முறை,உணவுபழக்கவழக்கங்கள்,பணப்புழக்கம் போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமிது.நீங்கள் அம்மா,அப்பா என்பதுடன் நல்ல நண்பன் முறையிலும் குழந்தைகளை அணுகுங்கள்.
பதின் பருவம்:இப்பருவத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு அதி முக்கியம் கொடுங்கள்.நட்பு என்ற சொல்லே மந்திரம் என்று இருப்பார்கள்.அதிலும் ஒரு அளவை நிர்மாணிக்க கற்றுக்கொடுங்கள்.பிள்ளையின் ஆர்வமும்,நோக்கமும் எந்த துறையின் மீது உள்ளதோ அதனை மேலும் விரிவு படுத்த உதவுங்கள்.உதாரணமாக் கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தால் கோச்சிங் கிளாஸில் சேர்த்துவிடத்தயங்காதீர்கள்.வலுகட்டாயமாக உங்கள் விருப்பங்களை புகுத்தும் பொழுதுதான் பிரச்சினையே ஆரம்பமாகிறது.இக்கால கட்டத்தில் ஜங்ஃபுட் போனன்றவற்றில் அதீத ஆர்வம் காட்டுவர்.அவைகளை குறைத்து நல்ல சத்துமிக்க ஆகாரங்களை,காய் பழ வகைகளை அதிகம் உட்கொள்ள வையுங்கள்.சுயமாக நல்ல முடிவெடுக்கும் திறனை ஊக்குவியுங்கள்
அறிவுப்பூர்வமான .ஆக்கமிகு விஷயங்களை அறியச்செய்வது,ஊக்குவித்தல்,அமைதியான சூழல் ஏற்படுத்திக்கொடுத்தல்.நல்ல பண்பாடு,நல்ல சிந்தனைகள்,நல்ல நட்புகள் போன்றவை சுற்றி இருக்குமாயின் பிள்ளைகளின் தன்னம்பிக்கை வலுப்பட்டு,நல்ல ,அறிவான சந்ததியினராக உருவெடுப்பார்கள்.சகாப்தத்தை படைப்பார்கள்.வெற்றி பெற்ற மனிதர்களாக ஜொலிப்பார்கள்.சாதனையாளர்களாக சாகப்தம் படைப்பார்கள்.
நம் அனைவரது சந்ததிகளுக்கும் அந்த பேறு கிடைத்திட வேண்டும்.